புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம் சத்ரானை 22 ரன்களில் பும்ரா விக்கெட்டாக்கினார். சில நிமிடங்களில் ரஹ்மானுல்லா குர்பாஸை 21 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.
ரஹ்மத் ஷாவை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கிய பின் இணைந்த ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியும், அஸ்மத்துல்லா உமர்சாயும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இக்கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் கடுமையாக முயற்சித்தனர். இறுதியில், அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்திருந்த அஸ்மத்துல்லா உமர்சாயை ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்கினார். இதன்பின்னும் சிறப்பாக விளையாடிய ஷாஹிதி 80 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டாகினார்.
இதன்பின் வந்தவர்களை பும்ரா தனது வேகத்தால் வரிசையாக வீழ்த்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் குல்தீப் மற்றும் ஷர்துல் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in