ODI WC 2023 | அரையிறுதிக்கு ‘ஸ்லோ பிட்ச்’- இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதா?

இன்று மதியம் வான்கடேயில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கான பிட்ச் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முன்னணி ஆங்கில நாளேட்டின் செய்திகளின் படி, ‘புற்களற்ற மண் தரை வேண்டும், அதுவும் பந்துகள் ஸ்லோவாக வர வேண்டும்’ என்று இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐ பிட்ச் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டனர் என்றும் அதன் படியே பிட்ச் இருக்கும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூருவிலும் தங்களுக்கு இந்தப் பிட்ச்தான் வேண்டும் என்று கேட்டுத் தயாரிக்கச் சொன்னதாக அதே ஆங்கில முன்னணி நாளேடு அதே செய்தியில் தெரிவித்துள்ளது. ஐசிசி தொடரில் எப்படி பிசிசிஐ பிட்ச் தயாரிப்பாளர்கள் வருகிறார்கள், அவர்களிடம் எப்படி இந்த மாதிரிப் பிட்ச் வேண்டும் என்று ஒரு அணிக்கு சார்பாக கேட்க முடியும் என்ற கேள்வியெல்லாம் பில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது போன்றதுதான்.

இரு அணிகளின் பலத்திற்கு ஏற்றவாறு சமச்சீரான பிட்சைத்தானே போட வேண்டும்? என்றெல்லாம் யாரும் கேட்க முடியாது என்பதே விஷயம் என்று விவரம் தெரிந்தவர்களும் கூறுகிறார்கள். பிசிசிஐ அந்தந்த ஊர்களில் மேட்ச் நடக்கும் போது உள்ளூர் பிட்ச் குழு ஒன்றை அமைத்து பிட்ச் தயாரிப்பை அவர்கள் மேற்பார்வைக்கு விட்டு விட்டதாகவும் முன்னணி ஆங்கில நாளேட்டின் அதே செய்தியில் கூறப்பட்டுள்ளதும் ஆச்சரியத்தை அதிகரித்துள்ளது. ஐசிசி நிபுணர்களும் உள்ளனராம்.

பிசிசிஐ தரப்பிலிருந்து அந்த ஆங்கில நாளேடு வாங்கிய தகவலில், ‘பிட்ச் பந்துகள் திரும்பும் பிட்ச் ஆக இருக்காது, ஆனால் ஸ்லோ பிட்ச் வேண்டும் என்று அணி கேட்டது’ என்று கூறியதாக பதிவு செய்துள்ளது. அதாவது கொஞ்சநஞ்சம் இருக்கும் புற்களையும் அகற்றி விடுமாறு அணி நிர்வாகம் கூறியதாக அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும், கேப்டன் ரோஹித் சர்மாவும் பிட்சை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டதாகவும் பிறகு மாலையில் பிட்ச் தயாரிப்பாளரிடம் பேசியதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கின்றது. இந்த உலகக்கோப்பையில் வான்கடேயில் சேசிங் கடினமாக இதுவரை இருந்து வந்துள்ளது. சேசிங்கில் வென்ற ஒரு போட்டியும் கிளென் மேக்ஸ்வெல்லின் அசாத்திய இன்னிங்ஸினால் விளைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே உலகக்கோப்பையில் சென்னை சேப்பாக்கத்தில் போடப்பட்ட பிட்ச் இந்திய அணி சவுகரியமாக உணரக்கூடியது. எனவே அதே போன்ற ஒரு ஸ்லோ ரகப் பிட்சைத்தான் அரையிறுதிக்கும் வேண்டும் என்று கேட்டிருக்கலாம், அதாவது அந்த ஆங்கில நாளேட்டின் இன்றைய செய்தியின் படி.

நாம் கேட்பதெல்லாம் ஆஸ்திரேலியாவோ, தென் ஆப்பிரிக்காவோ, இங்கிலாந்தோ தங்களுக்கு சாதகமாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பிட்ச்களை அமைத்ததுண்டா? உலகக்கோப்பை என்றல்ல, இருதரப்பு தொடர்களில் கூட ஆஸ்திரேலியாவிலோ, இங்கிலாந்திலோ, பிட்ச் தயாரிப்பாளரிடம் அணி நிர்வாகம் போய் இப்படிப் பிட்ச் போடுங்கள் என்று உரிமை நிலைநாட்ட முடியுமா என்பதுதான் கேள்வியே. ஏனெனில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், வர்ணனையாளர் இயன் சாப்பல் ஒரு முறை கூறியபோது, பிட்ச் தயாரிப்பாளர்களிடம் பிட்சை இப்படி போடுங்கள் அப்படிப் போடுங்கள் என்றெல்லாம் அங்கு பேசவே முடியாது என்று ஒரு பேட்டியில் கூறியதை நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *