ODI WC Final | அகமதாபாத்தில் திரளும் ரசிகர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு வருகின்றனர்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நாளை (19-ம் தேதி) மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் 5 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில் இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமான முறையில் 4 கட்டங்களாக நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐ-யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இறுதிப் போட்டி நாளில் பகல் 12 மணிக்கு இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் சுமார் 10 நிமிடங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள வான் பகுதியில் சாகசம் புரிய உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக விமானப்படை சாகசம் நடைபெற உள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளனர்.

2-வது பேட்டிங்கின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன் அணி கைகளில் ஏந்தும் போது 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படை எடுத்துள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் ரசிகர்களை வரவேற்க சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இசையுடன் தாண்டியா நடனமாடும் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை கலைஞர்கள் உள்ளிட்டோர் நடனமாடி ரசிகர்களை வரவேற்று வருகின்றனர். இதனால், அகமதாபாத் நகரம் களைகட்டியுள்ளது. விமான நிலயத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர் வருண், “இறுதிப் போட்டியை நேரில் காண வருகை தந்துள்ளேன். இந்த போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கப் போகிறது. இதில், இந்திய அணி வெற்றி பெறும். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த நாடும் ஆதரவாக நிற்கும்” என தெரிவித்தார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *