துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.11 – 17

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜன.11 - 17

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் – பஞ்சமஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-01-2024 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழிற்பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – ராசியில் சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சமஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-01-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது.

வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சமஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 15-01-2024 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக

ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:



– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'+divToPrint.innerHTML+'