“ஒருநாள், டி20 போட்டிகளுக்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை” – யுவராஜ் சிங் கருத்து

கொல்கத்தா: “டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இடம்பெற வேண்டும். ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அஸ்வின் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை” என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவரை டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவராக நான் நினைக்கவில்லை. பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதேசமயம் பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அவரால் அணிக்கு என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் இடம்பெற வேண்டும். ஆனால், வொயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவர் தகுதியானவர் என நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வின்: தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகமானார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். அதனால் இந்திய அணியில் முன்னணி வீரராக வலம் வந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமை அஸ்வினுக்கு உண்டு. ஆனால், ஒருநாள், டி20 அடங்கிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டியில் அவருக்கான வாய்ப்புகள் இந்திய அணியில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 2021, 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் மட்டும் அஸ்வின் விளையாடினார்.