“விதியோட விளையாட முடியும்னு நினைக்கிறீயா” – மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: மம்மூட்டி நடித்துள்ள ‘பிரமயுகம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மம்முட்டி நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகியுள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சேஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். படம் இம்மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி?: மொத்த ட்ரெய்லரும் கருப்பு – வெள்ளையில் இருள்சூழ் காட்சிகளுடன் வித்தியாச அனுபவமாக ஈர்க்கிறது. பதட்டம், பயம், விறுவிறுப்பு, குழப்பம் என நகரும் காட்சிகள் எதையும் கணிக்கவிடாமல் கவர்கின்றன. மம்மூட்டியின் தோற்றம் கவனம் பெறுகிறது. ஹாரர் பின்னணி இசை கூடுதல் அச்சம் விதைக்கிறது.

“நீ ரெண்டு தடவ விதியோட விளையாட முடியும்னு நெனைக்கிறீயா?”, “இது பிரமயுகம் கலியுகத்தோட கோர முகம்” என்ற வசனங்கள் படம் முழுக்க மர்மத்தை உள்ளிடக்கியிருப்பதை உறுதி செய்கிறது. கச்சிதமான ட்ரெய்லர் கட்ஸ், மம்மூட்டியின் புதிர் சிரிப்பு, ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.