அயோத்தி ராமர் கோயிலில் சத்குரு தரிசனம்

கோவை: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு நேற்று சென்று, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சத்குரு, “ராமர் கோயிலை கட்டுவதற்காக பல தலைமுறைகளாக பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இது வெறும் கல்லால் கட்டப்பட்ட கோயில் அல்ல; பக்தியாலும், விழிப்புணர்வான தியாகத்தாலும் கட்டப்பட்டுள்ள கோயில்” என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”500 ஆண்டு தொடர் போராட்டத்துக்கு பிறகு பக்தர்கள் ராமருக்கு கோயில் எழுப்பியுள்ளனர்.

ராமர் கடந்த காலத்தின் மிகப்பெரும் உத்வேகமாக மட்டுமின்றி, எதிர்காலத்துக்கும் பொருத்தமானவராக விளங்குகிறார். உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளும், ஆசைகளும், பாசங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.

அதேசமயம், அனைவருக்கும் பயன் தரக்கூட பொது நலன் என்று வரும் போது, உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன் தரக்கூடிய செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். இதற்கு ராமர் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.

எல்லாவற்றையும் விட வாழ்க்கை உங்கள் மீது எதை தூக்கி எறிந்தாலும், அதனால் பாதிப்படையாமல் நீங்கள் சமநிலையோடும், மனதின் அடிமைத்தனத்தில் சிக்கி கொள்ளாமல் சுதந்திரமாக வாழ முடியும் என்பதற்கு ராமர் முன் மாதிரியாக திகழ்கிறார்” என கூறியுள்ளார். தொடர்ந்து சத்குரு, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.

'+divToPrint.innerHTML+'