IND vs NZ நியூசிலாந்தை பழி தீர்த்த இந்தியா – வரலாற்று வெற்றி சாத்தியமானது எப்படி?

IND vs NZ நியூசிலாந்தை பழி தீர்த்த இந்தியா - வரலாற்று வெற்றி சாத்தியமானது எப்படி?

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ரோகித் – சுப்மான் கில் தந்த அதிரடி தொடக்கம், கோலியின் சாதனை சதம், ஸ்ரேயாஸின் அதிரடி சதம் மற்றும் 7 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமியின் பந்துவீச்சு ஆகியவற்றால் இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 397 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 327 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா பெறும் 10வது வெற்றி இதுவாகும்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேரல் மிட்செல் சதம் அடித்தார். அவர் 119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்களும், கிளென் பிலிப் 41 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி நெருக்கடியை எதிர்கொண்ட முதல் போட்டி இதுவாகும். நியூசிலாந்து இன்னிங்ஸின் போது, கேப்டன் கேன் வில்லியம்சன் – டேரல் மிட்செல் ஜோடி 181 ரன்கள் எடுத்தார். டேரல் மிட்செல் 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலகக் கோப்பையில் மிட்செல் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை அவர் அடித்தார்.

வில்லியம்சன் – மிட்செல் ஜோடி களத்தில் இருந்தபோது ஆட்டம் இந்தியாவின் பிடியில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இந்த ஜோடியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இந்திய அணியையும் இந்திய ரசிகர்களையும் இந்த ஜோடி அச்சுறுத்தியது.

முகமது ஷமி 7 விக்கெட் வீழ்த்தி அபாரம்

வில்லியம்சன் – மிட்செல் ஜோடியின் அதிரடிக்கு 33வது ஓவரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முற்றுப்புள்ளி வைத்தார். நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் தவறாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் முகமது ஷமி இந்த ஆட்டத்திலும் முதலிரண்டு விக்கெட்டுகளாக டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய அபாயகரமான பேட்ஸ்மேன்களை சாய்த்திருந்தார்.

அடுத்தபடியாக, நிலைத்து நின்று இந்திய அணியை அச்சுறுத்திய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனையும் அவரே வெளியேற்றி இந்தியாவின் நெருக்கடியை தணித்தார். அதே ஓவரில் டாம் லாதமை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பிய ஷமி, இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார்.

பின்னர், கிளென் பிலிப்ஸ் – டேரல் மிட்செல் ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை இணைத்து போட்டியை நியூசிலாந்தை நோக்கி திருப்ப மீண்டும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். இந்த ஜோடியை 43வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பிரித்தார்.

இந்திய தரப்பில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரல் மிட்செல், டாம் லாதம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முகமது ஷமி வழிவகுத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் பேட்டிங் எப்படி?

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்துக்கு எதிராக 397 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் எந்த அணியும் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற உலக சாதனை இதுவாகும்.

2015 உலகக் கோப்பையில், சிட்னியில் நடந்த அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

எனினும் இன்றைய இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்ததோடு, ஸ்ரேயாஸ் ஐயரும் சதம் விளாசினார். அதேசமயம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த இந்திய அணி, இந்தப் போட்டியில் வித்தியாசமாக இருந்தது.

ரோஹித் ஷர்மா தனது பழக்கமான பாணியில் அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் 71 ரன்கள் சேர்த்தார்.

ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, ரோஹித் நான்கு பவுண்டரிகள் மற்றும் பல சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

சச்சின் சாதனையை தகர்த்த கோலி

இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி முதலில் ஷுப்மன் கில்லுடன் 93 ரன்கள் சேர்த்தார், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 163 ரன்கள் எடுத்தார்.

இதன் போது, ஷுப்மான் கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார், ஆனால் போட்டியின் 23 வது ஓவரில், தசைப்பிடிப்பு காரணமாக அவர் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அப்போது கில் 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை அவர் கைப்பற்றினார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தபோது, சச்சின் டெண்டுல்கரும் மைதானத்தில் இருந்தார்.

விராட் 59 பந்துகளில் அரை சதத்தையும், 106 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இந்த நேரத்தில், ஒரு ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்தார். 2003 உலகக் கோப்பையில் சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட் இந்த உலகக் கோப்பையில் 711 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸில் விராட் 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.

விராட்டை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 70 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுல் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனபோது, சுப்மான் கில் ஆடுகளத்தில் வந்து தனது ஸ்கோரை 79 ரன்களுக்கு ஒரு ரன் சேர்த்தார். கில் 80 ரன்கள் எடுத்த பிறகு இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

மிட்செலுக்கு தசைப்பிடிப்பு – இந்தியா என்ன செய்தது?

சதம் கடந்து இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த மிட்செலுக்கு ஒரு கட்டத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சரித்திர சாதனை படைத்த மேக்ஸ்வெல் தசைப்பிடிப்புடனே ஆடி அந்த வரலாறை படைத்தது ரசிகர்களின் கண் முன்னே வந்து சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் போலல்மல் உடனே சுதாரித்துக் கொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித், வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை பந்துவீச அழைத்தார்.

அரௌன்ட் தி விக்கெட் முறையில் பேட்ஸ்மேனை விட்டு சற்று விலகிச் செல்லும் வகையில் பந்து வீசி அவரை திணறடித்தார். 33-வது ஓவர் முதல் 37வது ஓவர் வரை 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 17 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால், அந்த அணிக்கு வெற்றி பெறத் தேவையான ரன்ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நெருக்கடி தாங்காமல்தான் நியூசிலாந்து அணி கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

மும்பை வான்கடே ஆடுகளம் எப்படி இருந்தது?

மும்பை வான்கடே ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து பந்து சீமிங்ஆனது, ஸ்விங் ஆனது. அடுத்த 20ஓவர்களுக்கு பந்துகள் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து பவுன்ஸ் ஆகியது. 30 ஓவர்கள் வரை நியூசிலாந்து ஆடிய விதம் இந்திய அணிக்கு சற்று அச்சத்தையே ஏற்படுத்தியது. நன்றாக செட்டில்ஆகிய பேட்டர்கள் வில்லியம்ஸன், மிட்ஷெல் ஆட்டமிழந்தபின்புதான் திருப்பம் ஏற்பட்டது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்துக்கு சாதனை இலக்கை நிர்ணயித்த இந்தியா

இந்திய அணி சேர்த்த 397 ரன்கள் என்பது நிச்சயமாக எந்த அணியும் அடையக்கூடிய இலக்கு அல்ல. சிறு தவறு செய்தாலும், விக்கெட்டுகளை வரிசையாக இழந்தாலும் தோல்வியைச் சந்திக்க வேண்டியதுதான். நியூசிலாந்து தொடக்கத்தில் ரவீந்திரா, கான்வே விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆனாலும், மிட்ஷெல், வில்லியம்ஸன் மனம் தளராமல் போராடி 30 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணியை நம்பிக்கை முனை நோக்கி நகர்த்தினர்.

இருவரும் களத்தி்ல் இருந்தவரை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தம் இருந்தது. ஆனால் வில்லியம்ஸன் ஆட்டமிழந்ததுதான் திருப்பமாக அமைந்தது. அதன்பின் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. மிட்செலுக்கு துணையாகக் கூட யாரும் களத்தில் நிற்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *