பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க
“எந்த வகையிலும் சரியில்லை. ‘இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினான்… குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்’ என்ற உணர்வு படைத்த தமிழர்கள், மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்தபோது ஒன்றிய அரசு பாராமுகமாக நடந்துகொண்டதை மறக்க முடியுமா… உண்மையில் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால், பாதிப்புகளைப் பார்வையிடப் பிரதமர் வந்திருக்க வேண்டாமா… இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடத்திக்கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. நமது வரிப்பணத்தை வாங்க மட்டும் வஞ்சமில்லாமல் நீள்கிற அவர்களது கரம், நம் துயரைத் துடைக்க மட்டும் நீளாது என்றால் எப்படி… மாநில அரசு மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதும் ஹெலிகாப்டர் தொடங்கி அனைத்து விஷயங்களையும் மத்திய அரசிடம் போராடியே பெறவேண்டியிருந்தது. வந்துபோன ஹெலிகாப்டர்களுக்கும் எப்போது பில் அனுப்புவார்களெனத் தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்த நிதியமைச்சரை, ‘மயிலாப்பூரில் காய்கறி வாங்கத்தான் நேரமிருக்கிறதா?’ என்று பொதுமக்களே விமர்சிக்கத் தொடங்கிய பிறகுதானே தென்மாவட்டங்களை எட்டிப் பார்த்தார். ஆனாலும் மக்களைச் சந்திக்காமல், கோயிலுக்குச் சென்று அதிகாரிகளிடம் என்ன பேசினார் என்று எல்லோருமே பார்த்தோமே… தமிழ்நாட்டின் மீது இவர்களின் அக்கறை இவ்வளவுதான்.’’


நன்றி
Publisher: www.vikatan.com