எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். நிதிஷ் குமாருக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று கூறிய பா.ஜ.க-வும், அவரை அரவணைத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து, நிதிஷ் குமாரின் விலகல், தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா, பா.ஜ.க-வுக்கு உண்மையில் பலன் தருமா இல்லை நிதிஷ் குமாருக்கே பின்விளைவை கொடுக்குமா என்ற விவாதங்கள் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக சிறிய அளவிலான இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் வியூகத்துக்குள் பா.ஜ.க இறங்கியிருப்பதாக தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருகிறார்.
இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதனை விவரித்த பிரசாந்த் கிஷோர், “நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ஒருபகுதியாக இருந்தது அவ்வளவு பெரிய விஷயமல்ல. சொல்லப்போனால், சொந்தமாக ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எதையும் அவர் கொண்டுவரவில்லை. ஆனால், ஒரு புதிய உருவாக்கத்தில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராக அவரை நினைத்தார்கள்.
இப்படியிருக்க, நிதிஷ் குமாரை திரும்பப்பெற்றதன் மூலம், மக்களவைத் தேர்தல் என்ற போரில் வெற்றிபெறுவதற்காக, சின்ன சின்ன இழப்புகளை ஏற்கும் வியூகத்துக்குள் பா.ஜ.க சென்றிருக்கிறது. மேலும், பீகார் தொகுதிகளை வெல்வதற்காக நிதிஷ் குமாரை பா.ஜ.க ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவரை வெளியேற்றியதன் மூலம், அவர்களுக்கு உளவியல் ரீதியிலான அடியை பா.ஜ.க கொடுத்திருக்கிறது.

பா.ஜ.க-வுக்கு இதனால் உறுதியான ஆதாயம் எதுவும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இது உளவியல் ரீதியிலான அடியைக் கொடுத்திருக்கிறது. 2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்க்கட்சிகளுக்கு முன்பே தெரியும். அப்படியிருக்க, 2021-லோ அல்லது 2022-லோ இந்த கூட்டணியை அமைத்திருந்தால், சில விஷயங்களை சரிசெய்வதற்கு அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்திருக்கும்” என்று கூறினார்.

மேலும், நிதிஷ் குமார் பா.ஜ.க-வுடன் சேர்ந்து முதல்வராகப் பதவியேற்றபோது, இதே ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில், “பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இந்தத் தேர்தலில் முற்றிலுமாக துடைத்தெறியப்படுவார்கள். தன்னுடைய கடைசி இன்னிங்ஸை நிதிஷ் குமார் ஆடிக்கொண்டிருக்கிறார். மக்கள் அவரை நிராகரித்துவிட்டார்கள். அதனால், தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்ற அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். பீகாரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி என்பது இந்தியா கூட்டணியை ஒழித்துக்கட்டுவதற்கான பா.ஜ.க-வின் நடவடிக்கை” என்று பிரசாந்த் கிஷோர் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com