சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில், கடந்த நவம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி, “செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்னை உள்ளது. அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தற்போது இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.


மேலும், “அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. எனவேதான், இந்த மனு மருத்துவக் காரணங்களுக்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அவருக்கு இருக்கும் இதயக் குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது அவருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக, உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்” என்று வாதிட்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com