தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆளுயுர மாலை அணிவித்து வீரவாள் நினைவு பரிசாக வழங்கினர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தலைமைக் கழகத்தைச் சேதப்படுத்தியதாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுவதற்கு பதில் காவல் துறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்க்க வேண்டும். அதில் தலைமைக் கழகத்தை சேதப்படுத்தியது யார் என்பது தெரியவரும். அ.தி.முக.-வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ரத்து செய்வதற்கு யாருக்கு உரிமை இல்லை.
அந்த உரிமை எடப்பாடி பழனிசாமிக்கும் கிடையாது. ஜெயலலிதா 30 ஆண்டு காலமாக தியாக வாழ்க்கை வாழ்ந்து, பொதுச் செயலராக இருந்து கழகத்தைக் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தான் இக்கட்சி மாபெரும் இயக்கமாக இருந்தது என்பதால் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாதான் இருக்க வேண்டும் என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை ரத்து செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என 5 பேர் இணைந்து பணியாற்றினோம். இந்நிலையில் ஒற்றைத் தலைமைதான் வேண்டுமெனக் கூறி தன்னிடம் உள்ள பண பலத்தைப் பயன்படுத்தி, சிலர் ஒன்று சேர்ந்து சதி வேலை செய்தனர். அதை எதிர்த்துதான் இந்த தர்மயுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பிறகு ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமிதான் இக்கட்சியின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும்போது யாருடன் கூட்டணி என்பது முறையாக அறிவிக்கப்படும். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டபோது, அது ஆண்டிகள் கூடிக் கலையும் மடமாகத்தான் இருக்கும் என்றேன். அது இப்போது நிகழ்ந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அல்லாத டிடிவி தினகரன், சசிகலா உள்பட அ.தி.மு.க.,வில் உள்ள அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், இக்கழகத்தை வெல்வதற்குத் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இக்கட்சி ஒன்றிணைவதற்கு முடியாது எனக் கூறும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com