மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சபாநாயகர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் கடந்த மே 11-ம் தேதி உத்தவ் தாக்கரே தாக்கல் செய்திருக்கும் பதவிப்பறிப்பு மனு மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிவு செய்யும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டிருந்தது.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்றும், அது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகு உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலம் கடத்தி வந்தார்.
பதவி பறிப்பு மனுவின் அடிப்படையில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் கடந்த ஜூலை மாதம் சிவசேனாவின் இரண்டு அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 54 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட பதிலை கார்களில் கொண்டு வந்து சபாநாயகரிடம் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் கடந்த வியாழக்கிழமையில் இருந்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களை அழைத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு தொடர்பாக சபாநாயகரிடம் 34 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சுப்ரீம் கோர்ட்டில் தங்களது மனு விசாரணைக்கு பட்டியலிட்ட பிறகுதான் சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனுவை விசாரிக்க ஆரம்பித்தார் என்று குறிப்பிட்டார்.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் மகாராஷ்டிரா சபாநாயகர் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் மே 11-ம் தேதி உத்தரவிட்ட பிறகும் சபாநாயகர் என்ன செய்தார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சபாநாயகர் சார்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். மேலும், “இது போல் தாமதப்படுத்தக்கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆன பிறகும் எம்.எல்.ஏ.க்களின் பதவிப்பறிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசியலமைப்பு சட்டம் 10-வது பிரிவின் கீழ் இது போன்ற மனுக்களை காலவரையற்று முடிவு செய்யாமல் இருக்க முடியாது. சபாநாயகரில் செயல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிப்பதாகும். சபாநாயகர் இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பாக விசாரிக்கவேண்டும்.
இரண்டு வாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் மீதான பதவி பறிப்பு மனுக்கள் மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சபாநாயகர் விரிவாக அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏக்நாத் ஷிண்டே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சக்ரே இது குறித்து, “உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். ஆனால் இது விசாரணையை தாமதப்படுத்தும் செயல் என்று உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.ரவீந்தர வாய்கர் தெரிவித்தார். சபாநாயகர் ராகுல் நர்வேகர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்க இருக்கும் முடிவை உத்தவ் தாக்கரே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com